தொகுப்பு

Archive for the ‘சென்னை’ Category

நான் பார்த்த சென்னை (காட்சி 12)


மஹாபலிபுரம்
mahabalipuram
கடற்கரையோரம் ஓர் புராதன சிற்பக்கலையை பார்க்க விரும்பினால் இது தான் உங்களின் சரியான தேர்வாக இருக்கும்.மஹாபலிபுரம் என்ற பெயருடன் தற்போது அறியப்படும் ‘மாமல்லபுரம்’ நகரம் சென்னையை ஒட்டி தெற்கே காஞ்சிபுரம் மாவட்டத்தின் அங்கமாக வீற்றிருக்கிறது. இந்நகரம் 7 ம் நூற்றாண்டில் பல்லவ வம்சத்தின் துறைமுக நகரமாகவும் சிற்பக்கலை கேந்திரமாகவும் மஹோன்னத கீர்த்தியுடன் திகழ்ந்திருக்கிறது என்று இங்குள்ளவர்கள் கூறுகின்றார்கள். இன்று தமிழ்நாட்டின் மிக முக்கியமான சிற்பக்கலை சார்ந்த வரலாற்று சுற்றுலாத்தலமாக உலகளாவிய அளவில் புகழ் பெற்றிருக்கும் இந்த நகரம் சர்வதேச ‘யுனெஸ்கோ’ அமைப்பின் மூலம் உலகப்பாரம்பரிய ஸ்தலங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.
பெயர்க்காரணம்
மஹாபலி என்னும் அசுரகுல அரசன் இப்பகுதியை புராண காலத்தில் ஆண்டு வந்ததாகவும் பின்னர் மஹாவிஷ்ணு அவனை வதம் செய்ததாகவும் ஐதீகக்கதைகள் கூறுகின்றன.
எனவே இவ்வூருக்கு மஹாபலிபுரம் என்ற ஆதிப்பெயர் இருந்து வந்தததாக நம்பப்படுகிறது. மஹேந்திரவர்ம பல்லவரின் மகனாகிய முதலாம் நரசிம்மருக்கு மாமல்லர் என்ற பெயர் உண்டு.
ஒரு துறைமுக நகராக விளங்கிய இந்த நகரை கலைநகராக மாற்றிய அவரது பெயரே பின்னாளில் மாமல்லபுரம் என்று இதற்கு வழங்கப்பட்டதாக கருதப்படுகிறது. ‘மல்லை’ என்ற பெயரிலும் தற்போது இது சுருக்கமாக குறிப்பிடப்படுகிறது.
வரலாற்றுப்பின்னணி
திராவிட பூமியில் சேர, சோழ, பாண்டியர்களுக்கு அடுத்தபடியாக பல்லவ ராஜவம்ச மன்னர்கள் 3ம் நூற்றாண்டிலிருந்தே பல்வேறு ஆக்கிரமிப்புகளுக்கு மத்தியில் தமிழ் நாட்டின் வடகோடியை ஆண்டு வந்துள்ளனர்.
இந்த வம்சத்தின் வழித்தோன்றல்களாக வந்த பிற்காலப்பல்லவர்கள் காலத்தில்தான் இந்த மாமல்லபுரம் ஒரு முக்கிய நகரமாக உருமாறி கோலோச்சியிருக்கிறது.
மஹேந்திரவர்ம பல்லவர் மற்றும் நரசிம்மவர்ம பல்லவர் ஆகிய இரு மன்னர்கள் இன்றும் நாம் மாமல்லபுரத்தில் காணும் சிற்பக்கலை பொக்கிஷங்களின் பின்னணியோடு நெருங்கிய தொடர்புடையவர்களாக கருதப்படுகின்றனர். இவர்கள் காலத்தில் கலை, இலக்கியம், கவிதை, நாடகம் போன்ற கலைகள் யாவும் போற்றி வளர்க்கப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன.
நிஜக்கதையா, வரலாறா, கற்பனையா என்றெல்லாம் பிரித்தறிய முடியாத வண்ணம் தமிழின் ஆகச்சிறந்த எழுத்தாளர் கல்கி எழுதிய சிவகாமியின் சபதம் எனும் அற்புதமான புதினத்தின் ‘கதைக்களத்தில்’ மாமல்லபுரம் இடம் பெற்றிருப்பதை வாசித்தவர் அறிவர்.
அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிகழ்வுகள் வெறும் கற்பனையாக இருந்திருக்க வாய்ப்பில்லை என்பதை இந்த நகரில் மிச்சமிருக்கும் சிற்பச்சான்றுகள் உரைக்கின்றன. மற்ற எல்லா தமிழ் நகரங்களையும் போன்றே தொகுக்கப்படாத வரலாறும், எழுதப்படாத கீர்த்தியும்தான் மாமல்லபுரத்திற்கும் என்றாலும், இங்கு வரலாறு கல்லில் வடிக்கப்பட்ட கம்பீர கலைச்சின்னங்களில் பிரம்மாண்டமாக வாழ்கிறது.
இதுதான் மாமல்லபுரத்தின் பெருமை. எனவே, கலாரசிகர்களுக்கு நவீன இரைச்சல்களை விலக்கி உளிகளின் ஓசையையும், பல்லவ மன்னர்களின் நோக்கையும் கற்பனை செய்வதில் நிச்சயம் சிரமம் இருக்க முடியாது.
சூழலை முயன்று விலக்கி சிற்பக்கலை நேர்த்தியை தரிசிக்க வேண்டியிருப்பது காலத்தின் கட்டாயமன்றி வேறில்லை. எனினும் காலத்தை ஊடறுத்து நம் முன் மௌனக்கதை பேசும் மாமல்லபுரம் சிற்பப்படைப்புகள் நம்மை பெருமையுடன் கண் கலங்க சக்தி கொண்டவை -அதாவது வரலாற்றுக்கண் கொண்டு நோக்கும்போது.
ஒரு மஹோன்னத பாரம்பரிய ஸ்தலமாக இந்த நகரை போற்றி பாதுகாத்து அதை அவ்வண்ணமே பார்வையாளர்களும் அணுக தார்மீக நெறியூக்கம் செய்ய இயலாத மாயச்சூழலில், வரலாற்று சின்னங்களும் அவை வீற்றிருக்கும் ஏதோ ஒரு வகையில் பொலிவிழந்து காட்சியளிப்பது ஒரு இமாலய சோகம்.
யாவும் விட்டுச்சென்றனர் நம் முன்னோர், எனில் அவற்றை எவ்வகையில் நாம் காக்கின்றோம் என்பதே பெரும்பான்மை தமிழ் உள்ளங்களில் ஊமைக்கேள்வியாய் வீற்றிருக்கிறது.
18ம் நூற்றாண்டு வரையில் மஹாபலிபுரத்தின் வரலாற்று கலைச்சின்னங்கள் வெளியுலகிற்கு தெரிந்திருக்கவேயில்லை. ஏனெனில் இந்த படைப்புகளை ரகசியமாக உருவாக்குவதென்பதும் முதலாம் நரசிம்மர் மற்றும் ராஜசிம்மர் ஆகியோரது நோக்கமாக இருந்திருக்கிறது.
வரலாற்றுச்சின்னங்கள், கோயில்கள் மற்றும் சிற்பப்படைப்புகள்
கலை ரசிகர்கள் மற்றும் வரலாற்றுப்பிரியர்களை பிரமிக்க வைக்கும் ஏராளமான அம்சங்கள் மாமல்லபுரத்தில் நிறைந்துள்ளன. இங்குள்ள சின்னங்களை மண்டபங்கள், கோயில்கள், ரதக்கோயில்கள் என்று பல வகையாக பிரிக்கலாம்.
பஞ்ச பாண்டவ ரதங்கள், வராக மண்டபம் மற்றும் கடற்கரை கோயில் ஆகியவை இங்குள்ள குறிப்பிடத்தக்க அம்சங்களாகும். மேலும், மாமல்லபுரத்திலிருந்து 30 கி.மீ தூரத்தில் சோழமண்டல் கலைக்கிராமம் அமைந்துள்ளது. இங்கு ஓவியங்கள், கைவினைப்பொருட்கள் மற்றும் சிற்பங்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.
கடற்கரையை ஒட்டியே மாமல்லபுரம் கலை நகரம் பல்லவ மன்னர்களால் எழுப்பப்பட்டிருப்பது இதன் மற்றொரு விசேஷ அம்சமாகும். வெளிநாட்டுப்பயணிகள் பலர் இந்த கடற்கரையில் காலை முதல் மாலை வரை ஓய்வெடுப்பதையும், நகர் முழுதும் சுற்றித்திரிவதையும் பயணிகள் பார்க்க முடியும். நகரத்திலிருந்து 5 கி.மீ தூரத்தில் ஒரு துர்க்கையம்மன் கோயிலும் அமைந்துள்ளது.
இங்கு பல அழகிய சிலைகளை பார்க்கலாம். புலிக்குகை மற்றும் முதலைப்பண்ணை போன்றவை பயணிகள் விரும்பக்கூடிய இதர சிற்றுலாத்தலங்களாக அமைந்துள்ளன.
மாமல்லபுரத்திற்கு எப்படி செல்லலாம்?
சென்னைக்கு மிக அருகாமையிலும் பாண்டிச்சேரி-சென்னை கிழக்கு கடற்கரை சாலையின் பாதையிலும் அமைந்துள்ளதால் மிக சுலபமாக இந்த வரலாற்று நகருக்கு விஜயம் செய்யலாம். செங்கல்பட்டு வரை ரயிலில் சென்று அங்கிருந்து பேருந்து அல்லது டாக்சி மூலமாகவும் இங்கு வரலாம்.

எனக்கு மிகவும் பிடித்த இடம் என்று இதைக்கூறுவேன்.எனது உறவினர்களுக்கும் மஹாபலிபுரம் மிகவும் பிடித்தமான இடம் என்று கூறுவார்கள்.இந்த இடத்திற்கு அழைத்துச் சென்ற அண்ணாமலை அண்ணன் அவர்களுக்கு எனது நன்றிகள்.

நான் பார்த்த சென்னை (காட்சி 13) அடுத்த திங்கள் கிழமை வெளியாகும்.

பிரிவுகள்:ALL POSTS, சென்னை

நான் பார்த்த சென்னை (காட்சி 11)


chennai1

‘கைதி கிச்சன்’

சென்னை சென்றால் கண்டிப்பாக மறக்காமல் செல்ல வேண்டிய மிகவும் முக்கிய இடம் இது என்றால் யாரும் மறுக்க மாட்டார்கள்.அது என்ன?அது தான் ‘கைதி கிச்சன்’.என்னது ‘கைதி கிச்சன்’ ஆ ஆ ஆ….என்று யோசிக்கிறீர்களா. தப்பே இல்லை,யோசிக்க விட்டால் தான் பிரச்சனை. புதுமைகளுக்கு மக்களிடம் உள்ள செல்வாக்கை உணர்ந்து, மக்கள் செல்ல பயப்படும் அல்லது விரும்பாத ஒரு இடத்தை செயற்கையாக உருவாக்கி வெற்றியும் கண்டிருக்கிறார் இதன் உரிமையாளர்.

சென்னை, மயிலாப்பூரில் உள்ள ‘கைதி கிச்சன்’ செல்பவர்களை வியப்பில் ஆழ்த்தும் என்பது நிச்சயம்.தமிழ் நாட்டைச் சேர்ந்த நண்பர் ஒருவர் தான் இதைப்பற்றி எனக்குச் சொன்னார்.நான் நம்பவில்லை.அழைத்தே சென்று விட்டார்.நான் சிறைச்சாலைக்கு வந்து விட்டேனோ என்று ஆரம்பத்தில் யோசித்தேன்.பிறகு வியப்புடன் நம்பினேன்.என்ன நீங்களும் நம்பவில்லைத் தானே!!!!நம்பித் தான் ஆகனும்.

chennai

முழுக்க முழுக்க சிறை போன்ற அமைப்பில் உள்ள இந்த உணவகத்தின் வாசல், வேலூர் ஜெயில் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது என்று பரிமாறும் “கைதி” கணேசன் சொன்னார். மன்னிக்கவும் திரு.கணேசன் சொன்னார். உணவகத்தில், சிறைக்கூண்டில் (செல்லுக்குள்) அமர்ந்துதான் உண்ண வேண்டும். போலீஸ்(காவல்துறை) உடை அணிந்தவர்தான் கேள்வி (ஆர்டர்) எடுப்பார். உணவு பரிமாறுபவர், கைதி உடையில் இருப்பார். ஆங்காங்கே கைவிலங்குகள், துப்பாக்கிகள் என்று அசத்தியுள்ளனர் ‘கைதி கிச்சன்’ நிர்வாகத்தினர்.

‘கைதி கிச்சன்’ முழுமையான சைவ உணவகம். சைவத்தில் இத்தனை வகைகளா என்று ஆச்சரியப்பட வைப்பது இன்னுமொரு ஆச்சர்யம். உணவகத்தில் மெக்ஸிகன், மங்கோலியன், பர்மீஸ், தந்தூரி, சைனீஸ், இத்தாலியன், நார்த் இந்தியன் என அனைத்து வகை உணவுகளும் உண்டு. லிட்டி சொக்கா, பர்மீஸ் கௌசுவே, மங்கோலியன் சூப், க்ரீக் காட்டேஜ் சீஸ் சத்தே, தந்தூரி ஸ்மோக்கி பார்பிக்யு இவை எல்லாம் விசேட உணவுகள்.வாடிக்கையாளர்கள் இவற்றை எல்லாம் வாய்விட்டுப் பாராட்டிச் செல்வதுடன், சிறைக்கூண்டில் (ஜெயில் செல்லில்) புகைப்படம் எடுத்துக் கொள்வதிலும் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். மதியத்தைவிட, இரவு நேரங்களில்தான் களை கட்டுகிறதாம் கூட்டம்.

என்ன!இப்பவே செல்லத் தயாரா?!இந்த உணவகத்தைப் பற்றித் தெரியாதவர்களை அழைத்துச் செல்லும் போது விபரமாக சொல்லி அழைத்துச் செல்லுங்கள்.ஹி..ஹி…ஹி……

நான் பார்த்த சென்னை (காட்சி 12) அடுத்த திங்கள் கிழமை வெளியாகும்.

பிரிவுகள்:ALL POSTS, சென்னை குறிச்சொற்கள்:

நான் பார்த்த சென்னை (காட்சி 10)


முட்டுக்காடு

muttukadu
மிகவும் அழகான இடம்.சென்னையில் இருந்து சுமார் 40கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் முட்டுக்காடு படகு சவாரி சிறப்பாக இருக்கும். இங்கு பெடல் படகுகள் மோட்டார் படகுகள் என அனைத்து வகையான படகுகளும் இருக்கின்றன. பரந்து விரிந்த ஏரியில் ஜாலியாக படகு சவாரி செய்யும் அனுபவமே தனிதான்.அனைவரும் மிகவும் விரும்பி வந்து செல்லும் இடமாக இது உள்ளது.சென்னைக்கு மீண்டும் நான் வந்தால்,மீண்டும் செல்ல ஆசை.

மாயாஜால்

Mayajaal

மாயாஜால் (Mayajaal) என்பது சென்னையிலுள்ள ஒரு பொழுதுபோக்கு மையமாகும். இது கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள கானத்தூரில் அமைந்துள்ளது. இது பல்பொருள் அங்காடி, விளையாட்டு மையம், ஓய்வகம் மற்றும் பல்வகை திரையரங்குகள் கொண்ட இடமாகும். இங்கு 16 பல்வகை திரையரங்குகள் உள்ளன. இதுவே ஆசியாவிலேயே மிக அதிகமான பல்வகை திரையரங்குகள் கொண்ட இடமாகும். விளையாட்டு மையம் 2003 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதாக இங்கு பணி புரியும் பழனிச்சாமி என்பவர் என்னிடம் கூறினார்.ஓய்வகம் 2005 ஆம் ஆண்டு நாற்பது அறைகளுடன் திறக்கப்பட்டதாக கூறுகின்றார்கள்.முப்பதாயிரம் சதுர அடிகள் கொண்ட பல்பொருள் அங்காடி 2006 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதாம்.

 

தட்சிணசித்ரா

தட்சிணசித்ரா
தட்சிணசித்ரா
தட்சிணசித்ரா

 

முட்டுக்காடு செல்லும் வழியில் இருக்கும் இடம் தட்சிணசித்ரா. கைவினைப் பொருட்கள் இங்கு அதிகமாக இருக்கும். மேலும், தமிழ்நாடு மற்றும் மற்ற தென்னிந்திய மாநிலங்களின் கலாச்சாரத்தினை பிரதிபலிக்கும் இடமாக அமைந்திருக்கிருக்கின்றது தட்சிணசித்ரா. சென்னைக்கு சென்றால் பார்க்க வேண்டிய முக்கிய இடம் இதுவாகும்.

நான் பார்த்த சென்னை (காட்சி 11) அடுத்த திங்கள் கிழமை வெளியாகும்.

பிரிவுகள்:ALL POSTS, சென்னை குறிச்சொற்கள்:

நான் பார்த்த சென்னை (காட்சி 8)


சென்னையில் நான் பார்த்த,கேட்ட ,அறிந்த சில விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கின்றேன்.சென்னை பல விடயங்களை தன்னுள் புதைத்து வைத்துள்ளதை அங்கு சென்று அறிந்தால் மட்டுமே விளங்கிக் கொள்ளலாம்.சென்னையில் நான் பலருடன் உரையாடியிருக்கின்றேன்.அவை உண்மையானவையாக இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம்.நான் அறிந்த,தெரிந்த சில விடயங்களைக் கூறுகின்றேன்.

முதலில் சென்னையை பார்ப்பவர்கள் தமிழர்களின் தலைநகரம் என்று கருதுவார்கள்.ஆனால் உண்மையில் தமிழர்கள் 50 விழுக்காடுக்கும் குறைவாகவே சென்னையில் வாழ்கிறார்கள். மலையாளிகள்,தெலுங்கர்கள் போன்ற வேற்று இனத்தவர்களே மிகுதி 50 விழுக்காட்டையும் பகிர்ந்து கொள்கிறார்கள்.கன்னட இனத்தவர்கள் மிகக் குறைவாக வாழ்கின்றார்கள்.வெளி மாநில தொழிலாளர்கள் மிக அதிகமாகவே தொழில் புரிகின்றனர்.

Chennai

சென்னையில் பெண்கள் பெரும்பாலும் வீடுகளிலும் சேலைதான் அணிகின்றனர். ஆனால்,யாழ்ப்பாணத்தில் வெளியில் செல்வதென்றால் மட்டுமே சேலை அணிவார்கள். பெண்களும் சரி,ஆண்களும் சரி உந்துருளியில் செல்லும் போது தலைக்கவசம் அணிவதே இல்லை. பதிலாக,வெளிப்புற தூசு,வாகனப் புகையில் இருந்து பாதுகாப்பதற்காக பெண்கள் ஒருவித கைக்குட்டை வடிவிலான துணியை தலையைச் சுற்றி அணிகிறார்கள்.

Chennai

பொதுவாக சென்னை ஆண்கள் திருமணம் தொடர்பாக இருவேறு மனநிலையில் இருக்கின்றனர்.ஒருசாரார் சென்னைக்கு வெளியே பெண் எடுப்பதை விரும்புகின்றனர். நவீன சென்னை பெண்களின் ஆண் ஆதிக்கத்தை எதிர்க்கும் அல்லது சமஉரிமை கோரும் பண்புகள் இவர்களுக்கு சலனத்தை அல்லது சினத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.

இன்னொரு சாரார் சென்னை பெண்களை விரும்புகின்றனர்.சென்னைக்கு வெளியே பெண் எடுத்தால் அவருக்கு சமையல் மட்டுமே தெரியும்,வெளி உலகம் தெரியாது, வெளி உலகம் தெரியாத பெண்ணுக்கு சென்னையில் மதிப்பு கிடையாது,பிள்ளைகளை வளர்ப்பது சிரமம் போன்ற பல காரணங்கள் இதில் காணப்படுகின்றன.

Chennai

சென்னையில் வெயில் மிக அதிகம்.சென்னைக்கு வந்த எவரும் கதைக்கும் முதல் விடயம்,”என்ன வெயில் இப்படிக் கொளுத்துதே”.ஆனால் மழை அதைவிட மோசம் என்று சென்னை வாசிகள் கூறுகின்றனர்.மழை வந்தால் சென்னை நரகமாக காட்சியளிக்கும் என்கிறார்கள் அனுபவித்த பலர். பாம்புகளும் கூடவே வருமாம்.

Chennai

சென்னையில் நாய்த் தொல்லையும் அதிகம்.என்னுடன் வந்த உறவினர் கடி வாங்கியது தனிக் கதை. அதிகமான கட்டாக் காலி நாய்கள் திரிகின்றன.இரவில் சிறிய ஒழுங்கைகளில் நடமாடுவதென்றால் நான்கு பேரை கூடிச் செல்ல வேண்டும்.இல்லாவிட்டால் நாயிடம் கண்டிப்பாக கடி வாங்க வேண்டி வரும்.

Chennai

காய்கறி,பழங்கள் தவிர சென்னையில் பொருட்களின் விலை மிக அதிகம். தொழிலாளர்களுக்கான ஊதியமும் இங்கு குறைவு.தகவல் தொழில் நுட்பத்துறையில் வேலை செய்பவர்கள் கை நிறைய சம்பாதிக்கிறார்கள்.

Chennai

==============================================================================================================================

நான் பார்த்த சென்னை (காட்சி 9) அடுத்த திங்கள் கிழமை வெளியாகும்.

பிரிவுகள்:ALL POSTS, சென்னை குறிச்சொற்கள்:

நான் பார்த்த சென்னை (காட்சி 7)


Chennai_
கோயம்பேடு என்ற வார்த்தையை பலரும் திரைப்படங்கள் மூலம் அறிந்திருப்போம். கோயம்பேடு சென்னை மாநகராட்சியில் உள்ள ஒரு பகுதியாகும். சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள சென்னை புறநகர் பேருந்து நிலையம் ஆசியாவிலேயே பெரிய பேருந்து நிலையமாகும். இங்கு மிகப்பெரிய காய்கறிச் சந்தையும் உள்ளது.ஆசியாவின் மிகப்பெரும் காய்கறிச் சந்தை என்ற தனிச்சிறப்பை இன்றும் தக்க வைத்துள்ள கோயம்பேடு சந்தை சென்னையின் தனித்துவ அடையாளமாக திகழ்கின்றது.ஆனால் அதன் தனித்துவம் சென்று பார்த்தால் மட்டுமே தெரிய வரும்.
KOYEMBEDU
கோயம்பேட்டில் கோயட்டி என்ற ஒரு குருட்டு நாரை இருந்ததாம். இது தன் பக்தியால், இறக்கும்போதும் இறைநாமம்ஓதிச் சிவலோகப் பிராப்தி அடைந்ததாம்! அதனால் அந்த நாரையின் பெயரால் ‘கோயட்டிபுரம்’ என்று இந்த இடம் முதலில் அழைக்கப்பட்டு, பின் அது ‘கோட்டிபுரம்’ என்றாகி நாளடைவில் ‘கோயம்பேடு’ என மருவியதாம்.
Chennai__Bus_Terminus

KOYEMBEDU
திருமணத்திற்கு தேவையான காய்கறிகளையும் மற்றும் இதர பொருட்களை வாங்கவும் உறவினர்களுடன் பயணமானேன்.அங்கு சென்று சேர்ந்தவுடன் சற்று ஆடித் தான் போனேன்.நான் இதுவரை பார்க்காத ஒரு சந்தையை நேரில் கண்டேன்.இதுவரை நான் கண்டிராத காய்கறிகளையும்,பழங்களையும் அங்கு தான் கண்டேன்.காய்கறிகள் மிகவும் மலிவு விலையில் கிடைத்தமை ஆச்சரியம்.எனக்கு பழங்களில் மாதுளம் பழமும்,அன்ன முன்னா என்ற பழமும் மிகவும் பிடித்த பழங்கள்.யாழ்ப்பாணத்தில் ஒரு மாதுளம் பழம் குறைந்தது முன்னூறு ரூபா வரும்.ஆனால் இன்று ஐந்து ரூபாவில் கிடைக்கின்றது.நம்புங்கள் நண்பர்களே!

வழுதுணங்காய்,பிசிக்கங்காய்,சாத்தாவாரிசிறகவரை,செங்கிழங்கு,காராமணி,களாக்காய் போன்ற காய்கறிகளை கோயம்பேடு சந்தையில் முதன் முதலாக கண்டேன்.
அம்பிரலங்காய்,பஞ்சலிப்பழம்,சீமையிலுப்பை,கடார நாரந்தை, சாத்துக்கொடி, பேயத்தி, பம்பரமாசு,லன்சியம்,மண்டரின் நாரந்தை, மசுக்குட்டிப்பழம்,இளஞ்செம்புற்றுப் பழம் போன்ற பழங்களையும் கோயம்பேடு சந்தையில் தான் முதன் முதலாக கண்டேன்.இந்த சந்தையின் பிரதான வணிகம் காய்கறி என்ற போதும் பல வியாபாரமும் மும்முரமாக நடக்கின்றது.

முக்கியமான விடயத்தை கூற மறந்திட்டன்.ஓம்..அதுதான் மாலை வியாபாரம்.மாலை என்றவுடன் குழம்பிப் போய் விடாதீர்கள்.கிழக்குத் திசையில் உதிக்கின்ற சூரியன் மேற்குத் திசையில் மறைகிறது, இந்த மறைதல் நேரத்தை, மாலை எனலாம்.அல்லது மாலை என்னும் சிற்றிலக்கிய வகை.அல்லது முத்தாரத்தை முத்துமாலை என்பர்.அல்லது கழுத்தில் அணியக்கூடிய மலர்களால் ஆன தொகுப்பும், மாலை எனப்படும்.நான் கூறுவது கழுத்தில் அணியக்கூடிய மலர்களால் ஆன தொகுப்பையே கூறுகின்றேன்.
koyambedu_

தமிழர் வாழ்க்கையில் பூக்களுக்குத் தரப்படும் முக்கியத்துவம் ஆழ்ந்த பரிசீலனைக்குரியது. பரந்துபட்ட நிலவெளியைப் பூக்களின் பெயரால் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனப் பூக்களின் பெயரால் அடை யாளப்படுத்திய பண்டைத் தமிழரின் ஆழ்மனத்தினுள் பூக்கள் தொன்மங்களாக உறைந்திருந்தன. குறிஞ்சிப் பாட்டில் கபிலர் 99 பூக்களைப் பற்றி விவரிப்பது வெறுமனே தகவல் அல்ல. பூக்கள் மீதான தமிழரின் காதல் என்றுதான் அதைக் கருத வேண்டும்.

தமிழரின் வாழ்க்கையில் மலர்கள் எல்லாக் காலகட்டங்களிலும் நடைபெறும் சிறப்பு நிகழ்வு களில் முதன்மையிடம் வகிக்கின்றன. குழந்தை பிறப்பு முதலாக இறப்பு வரை எல்லா நிலைகளிலும் பூக்கள் இல்லாமல் எதுவுமில்லை. தாயின் வயிற்றில் குழந்தை கருவானதும், ஏழாவது மாதம் நடை பெறும் வளைகாப்பு நிகழ்ச்சியில் பெண்ணின் தலையிலிருந்து தொங்கும் சடையைப் பூக்களால் அலங்கரிக்கப்படுகிறது. மேலும் அவளது கழுத்தில் மாலையை அணிவித்து, கைகளில் வளையல் அணி விக்கும் சடங்கு நடைபெறுகின்றது.

குழந்தை பிறந்து சில மாதங்களில் தலை முடியை மழிக்கும் சடங்கில், கழுத்தில் மலர் மாலை அணிவிப்பது முக்கியமான சடங்கு. ஒரு வயதுக் குழந்தையின் தலைமுடியைச் சின்னக் குடுமியாக்கி, அதில் பூச்சரத்தை வளையமாக வைத்தால்தான் சில தாய்மார்களுக்குத் திருப்தி. பெண் வயதுக்கு வந்தவுடன் செய்யப்படும் சடங்கு களில், தாய் மாமா அவளுக்கு மலர் மாலை சூடுகின்றார். அந்தச் சிறுமியின் தலைமுடியை நீளமான சவுரி முடியை இணைத்துப் பின்னி, அதில் தாழை மலரின் மடல்களை அழகாக வைத்துத் தைப்பதுடன், அந்த அலங்காரம் ஆள் உயரக் கண்ணாடியில் தெரியுமாறு நிழற்படம் எடுத்து வீட்டில் தொங்கவிடுவது எண்பதுகளில் கூட நிலவியது.

இளம்பெண் பருவமடைவதனைப் ‘பூப் படைதல்’ என்ற சொல்லால் குறிப்பது கிராமிய வழக்கு. பூப்புனித நீராட்டு விழா என்ற பெயரில் அழைப்பிதழ் அச்சடித்து, ஊரைக் கூட்டி விருந்து போட்டு விமரிசையாகக் கொண்டாடுவது மதுரைப் பக்கத்துக் கிராமங்களில் இன்றும் நடைபெறு கின்றது.

பெண் பார்க்கும் நிகழ்ச்சியில் ‘பூ வைத்தல்’ சடங்கு குறிப்பிடத்தக்கது. பெண் பிடித்துவிட்டது, அவளை விரைவில் மணமகளாக ஏற்றுக் கொள் கின்றோம் என்று உறுதியளிக்கும் வகையில் பையனின் தாயார், சகோதரிகள் அப்பெண்ணின் தலையில் பூவைச் சூடுவது, ஒருவகையில் ஆரவாரம் அற்றது. தங்கள் குடும்பத்திற்கு மணமகளாக வரவிருக்கும் இளம் பெண்ணின் தலையில் பூவைச் சூடுதல் மூலம் தங்களுடைய உரிமையை உறுதி செய்துகொள்வது இன்றும் வழக்கினிலுள்ளது.

திருமண நாளில் ஆணுக்கும் பெண்ணுக்கும் மலர் மாலைகள் அணிவித்துக் கையில் பூச்செண்டுகள் தரப்படுகின்றன. மணமேடையில் உற்றார் உறவினர் முன்னிலையில், திருமணம் என்ற உறவு எங்களுக்குள் ஏற்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்தும் வகையில் மாப்பிள்ளையும் பெண்ணும் பரஸ்பரம் மாலைகளை மூன்று தடவைகள் மாற்றிக் கொள்கின்றனர். திருமண நாளில் மணப்பெண்ணுக்குத் தலைமுடி தெரியாத அளவுக்கு பூச்சரத்தைச் சூடுவதன் மூலம், அந்தப் பெண்ணின் மனதில் குதூகலத்தை ஏற்றுகின்றனர்.

தமிழகத்தில் குடும்பப் பெண் அல்லது சுமங்கலி எனப்படுபவளின் அடையாளமாக மஞ்சள், குங்குமம், வளையல் போன்றவற்றுள் பூக்களும் குறிக்கப் பெறுகின்றன. பெண் தலையில் பூவைச் சூடுவதற்கும் குடும்பப் பெண்ணுக்குமான உறவு ஆய்விற்குரியது. பண்டைக் காலத்தில் இளம் பெண்கள் பூச்சூடும் வழக்கம் இல்லாமல் இருந்திருக்கவேண்டும். ஏதோ ஒரு காலகட்டத்தில் திருமணமான பெண் எனக் குறிப்பதற்குப் பூவானது குறியீடாக மாற்றப்பட்டு இருக்கலாம். இன்று நெற்றியின் உச்சி வகிட்டினில் குங்குமத்தை இட்டுக் கொள்வது, பெங்காலி, கன்னடப் பெண்களிடமிருந்து 90களுக்குப் பின்னர் தான் தமிழகத்திற்குப் பரவியுள்ளது.

கோயம்பேடு சந்தையில் பல வகைப்பட்ட மாலை வகைகள் கிடைக்கின்றன.மாலை என்றவுடன் அதன் வகைகள் பற்றியும் ஒரு சிந்தனை வரும். அதிலும் திருமண மாலைகள் விசேடமானது.சாமந்திப்பூ திருமண மாலைகள்,மந்தாரைப்பூ திருமண மாலைகள்,சம்பங்கிப்பூ திருமண மாலைகள்,ரோஜா பூவிதழ் திருமண மாலைகள்,ரோஜாப்பூ திருமண மாலைகள் என்பன அவற்றில் விசேடமானவை.அது தவிர நடிகர்கள்,நடிகைகள் தங்கள் திருமணத்தில் பயன்படுத்திய மாலைகளும் இங்கு கிடைக்கின்றன.
சாமந்திப் பூச்சரங்களின் மாலை

koyambedu_

சென்னை சென்றால்,இப்படிப் பல சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ள கோயம்பேடு சந்தையை பார்க்க மறக்காதீர்கள்.

நான் பார்த்த சென்னை (காட்சி 8) அடுத்த திங்கள் கிழமை வெளியாகும்.

பிரிவுகள்:ALL POSTS, சென்னை குறிச்சொற்கள்:

நான் பார்த்த சென்னை (காட்சி 6)


police
சென்னையில் என்னை மிகவும் கவர்ந்த விடயம் அவர்களுக்கு வழங்கப் பட்டிருக்கும் சுதந்திரம்.நான் சென்னையின் பல இடங்களையும் சுற்றிப் பார்த்திருக்கிறேன். எங்கும் நான் ராணுவத்தை காணவேயில்லை.ஆங்காங்கே போக்குவரத்து காவல்துறையினரை மட்டுமே கண்டேன்.மிகவும் சுதந்திரமாக கருத்துப் பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. பத்திரிகைகள் மிகவும் சுதந்திரமாக செயற்படுகின்றன.மாற்றுக் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கப் படுகின்றது.ஒரு மனிதனின் தேவைகளில் உணவு,உடை, உறையுள்,சுதந்திரம் என்பன மிக முக்கியமானவை. சென்னைக்கு வரும் எந்த யாழ்ப்பாணத் தமிழனும் அவர்களுக்கு வழங்கப் பட்டிருக்கின்ற சுதந்திரத்தை இட்டு ஏக்கப் பெருமூச்சு விடவே செய்வான்.
chennai
ஆனால் பெண்கள் இங்கே சுதந்திரமாக இருக்கின்றார்கள் என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்வேன்.நான் விருகம்பாக்கத்தில் உள்ள கடை ஒன்றுக்கு சென்றேன்.அங்கே பல சிறு வயதுடைய பெண்கள் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.அன்று ஞாயிற்றுக் கிழமை வேறு.
இரண்டு பெண்களுக்கு இடையில் இவ்வாறு உரையாடல் நடை பெறுகின்றது.

பெண்:அம்மாவுக்கு காய்ச்சல்.ஒருக்கா கதைக்க வேண்டும்.
பெண் :துரையிட்ட கேள்.
(அலைபேசி கூட இல்லாத ஏழைப் பெண்கள் இவர்கள்)
பெண்:அம்மா வேலை செய்யிற இடத்திற்கு ஒருக்கா பேசணும்(கதைக்கனும்)
முதலாளி:பொய் வேலையைப் பாரு.
பெண்:அம்மா காய்ச்சலிலும் வேலைக்குப் போயிருக்கு.ஒரு நிமிடம் பேசணும்.
முதலாளி;இந்தா பேசு.(அந்தப் பெண்ணின் கன்னத்தை முதலாளி கிள்ளுகிறார்.அந்தப் பெண் கதைத்துக் கொண்டு இருக்கும் போது கன்னத்தை எந்த வித தயக்கமும் இன்றி தடவுகிறார்.அந்தப் பெண் கையறு நிலையில் இருக்கிறார்.)

படபடப்புடன் கதைத்த(பேசிய) அந்தப் பெண் அலைபேசியை கொடுக்கிறார்.

ஏழைப் பெண்களின் நிலை இது தான்.இவ்வாறு எத்தனை பெண்களுக்கு நடக்கின்றதுவோ?! கடவுளுக்குத் தான் வெளிச்சம்.
police
இதைப் படித்துக்கொண்டிருக்கும் நீங்கள், நீங்கள் என்ன பூவா பறித்துக் கொண்டிருந்தீர்கள் என்று என்னைப் பார்த்து கேட்கலாம்.நான் கடுமையாக கோபம் அடைந்தேன். காவல்துறையிடம் முறையிடலாமா என்று எனது உறவினரிடம் கேட்டேன்.அந்தப் பெண் தனது வேலையை காப்பாற்றுவதற்காக, காவல்துறையிடம் அவ்வாறு நடக்க வில்லை என்று சொன்னால் என்ன செய்வாய் என்று கேட்டார்.அமைதியானேன்.
MTC-Bus-plying-in-Tambaram-to-Thiruvanmiyur-route-
பேரூந்துகளிலும் பெண்களின் நிலை அதோ கதி தான்.பெண்களிடம் தங்கள் கோழைத்தனத்தை காட்ட பலர் பேரூந்துகளையே பயன்படுத்துகிறார்கள்.அதுவும் இரவில் சென்னையில் பயணம் செய்வது என்றால் மிகவும் கடினம்.இரவில் மிக அதிகமான பயணிகள் பேரூந்துகளில் பயணிப்பதால் பெண்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது.பேரூந்துகளில் பயணிக்கும் பெண்களுக்கு உள்ள ஒரே ஆறுதல், இருக்கையில் ஒரு பெண்ணுக்கு அருகில் இருக்கை இருந்தாலும் ஒரு ஆண் அமர முடியாது என்பது தான்.
pleasure
ஒரு பெண் உந்துருளியில் சென்றால் அந்த பெண்ணை பின் தொடர்ந்து நான்கு உந்துருளிகளில் ஆண்கள் செல்கிறார்கள்.செல்வது மட்டுமில்லை கிண்டல் ,கேலி வேற.ஏன் ஒரு பெண் உந்துருளி ஓடக் கூடாதா.உண்மையை சொல்லப் போனால், உந்துருளியை பாதுகாப்பாக ஓட்டுபவர்கள் பெண்கள் என்று தான் சொல்ல வேண்டும்.


நான் பார்த்த சென்னை (காட்சி 7) அடுத்த திங்கள் கிழமை வெளியாகும்.

பிரிவுகள்:ALL POSTS, சென்னை குறிச்சொற்கள்: